Tuesday, November 9, 2010

தனிமை!

தனிமையின் நினைவுகளே
பிடித்தமாய் இருக்கின்றன

விட்டத்தை வெறித்து
பார்க்கும்போது
நமக்கானவை அனைத்தும்
அப்படியே இருப்பதாகவும்

மேகங்கள் அசையும்போது
நம்முடையவை விலகி
போகிறதாகவும்

லேசான காற்று சன்னமாய்
என்னை தொடும்போது
இயற்கை என்னை
அசைப்பதாகவுமே
நினைத்துகொள்கிறேன்

கூட்டத்தில் இருந்தாலும்
எனக்கானவைகளையெல்லாம்
எங்கோ தொலைத்ததொரு
தோற்றம்

எங்கே தேடியெடுப்பேன்
என்னிடமிருந்து சென்ற
விளையாட்டுத்தனங்களை
குறும்புகளை
வேடிக்கைகளையும்

புதிதானவற்றையெல்லாம்
வித்தியாசமாக எதிர்கொண்டு
கற்றுகொள்ளும் என் திறமெல்லாம்
எங்கே சென்றது

நான்கு சுவற்றுக்குள்
என் முன் அடுக்கிவைத்திருக்கும்
பைல்களில் எங்கேயாவது
ஒளித்து வைத்துவிட்டேனா

கனநொடியில் வேலைமுடிக்கும்
கணினிக்குள் உலவும்
போல்டர்களில் லாக்
செய்து மறைத்துவிட்டேனா

நொடிக்கொரு பொழுதுகளில்
ஓலமிடும் மேனேஜரின்
கட்டளைகளின் நடுவே
என்னை நான் மறந்தே
போய்விட்டேன் போலும்

கண்டெடுக்க வேண்டும்
என் சுயத்தை.......

மூன்றடிக்கு கொடுக்கப்பட்டிருக்கும்
கண்ணாடிக்கதவினை
இரண்டு இன்ச்சுகள் திறந்து
வைத்தால் வந்துவிடும்
என் சிட்டுக்குருவி
எத்தனை உலக அதிசயங்களை
கண்டாலும் சிட்டுக்குருவி
கண்டெடுத்து கொடுக்கும் என்னை
அதன் குரலிலும் உருவிலும்.......

12 comments:

  1. அழகாய் தவிப்பை சொல்லும் கவிதை மா நன்று!!!

    ReplyDelete
  2. கூட்டத்தில் இருந்தாலும்
    எனக்கானவைகளையெல்லாம்
    எங்கோ தொலைத்ததொரு
    தோற்றம்

    அவ்வப்போது எனக்கும் இது போன்ற உணர்வு தோன்றுவது உண்டு

    ReplyDelete
  3. ம்ம்ம் . தனிமையின் இதம் .

    ReplyDelete
  4. நொடிக்கொரு பொழுதுகளில்
    ஓலமிடும் மேனேஜரின்
    கட்டளைகளின் நடுவே
    என்னை நான் மறந்தே
    போய்விட்டேன் போலும்

    கண்டெடுக்க வேண்டும்
    என் சுயத்தை.......

    வெகு சீக்கிரம் கண்டுபிடியுங்கள்

    ReplyDelete
  5. எத்தனை உலக அதிசயங்களை
    கண்டாலும் சிட்டுக்குருவி
    கண்டெடுத்து கொடுக்கும் என்னை
    அதன் குரலிலும் உருவிலும்.......

    சரிதான் சிட்டு....

    ReplyDelete
  6. தனிமையின் நினைவுகளே
    பிடித்தமாய் இருக்கின்றன//

    முதல் வரிகளே அருமையா இருக்கு

    ReplyDelete
  7. கவிதை யாரு எழுதினதுன்னு போடலயே..! இது ஒரு குழு வலைப்பதிவாக இருப்பதால், படைப்பாளியின் பெயர் தேவையென்று கேட்கிறேன்!


    கவிதை நன்று!

    ReplyDelete
  8. யதார்த்தமான எழுத்துவரிகளில் கவிதை ரசிக்கும்படியாய் அருமையாக உள்ளது.

    ReplyDelete
  9. வாணி கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு அப்படியே அனைவரும் உணரும் பொது உணர்வை படம் பிடிச்ச மாதிரி பெயர் போடலை ஆனால் எழுத்தில் வாணியின் வாசம் இருப்பது போல இருக்கு எனக்கு...

    ReplyDelete